இராமன் தன் தந்தையாகிய தயரதன் ஆணையின் பேரில் மனைவியுடன் காட்டினை அடைந்தான் (வனவாசம் சென்றான்). அந்தக் காட்டில் வாழும் வாழ்க்கையிலும் மனைவியை இழந்து பெருந்துன்பம் அடைந்தான். பிரம்மனை ஈன்ற திருமாலுக்கே இந்த நிலை என்பது உனக்குத் தெரியாதா? எல்லாரும் அறிந்த கதையல்லவா?
இப்பகுதி, கோவலனுக்குச் சொல்லப்படும் ஆறுதல் மொழியாக இடம்பெற்று உள்ளது.
ஆய்ச்சியர் குரவை
திருமாலைப் போற்றி இடைக்குல மக்கள் பாடும் ஆய்ச்சியர் குரவையிலும் அவனது இராம அவதாரம் பற்றிய குறிப்பு வருகிறது.
(மூஉலகு = மூன்று உலகம் / மேலுலகம், கீழ் உலகம், பூமி ; ஈரடி = கால்கள்; நிரம்பா வகை = குறைவுபடும்படி; சேப்ப = சிவக்க; சோ அரண் = சோ என்ற மதில்; சீர் = புகழ்.)
திருமாலின் பத்து அவதாரங்களுள் வாமன அவதாரமும் ஒன்று. வாமன அவதாரத்தில் மாவலி மன்னன் தானமாகத் தந்த மூன்றடி மண்ணையும் அளந்து பெறுவதற்காக வாமனன் பேருருக் கொண்டான். மூன்று உலகத்தையும் இரண்டு அடிகளால் அளந்தான். அத்தகைய திருவடிகள் சிவக்க, இராமன் தன் தம்பியோடு, காட்டிற்குச் சென்றான். சோ என்னும் அரணையும் தொன்மையுடைய இலங்கையையும் அழித்தவன் அவனே. அத்தகையவனுடைய புகழைக் கேட்காத செவிதான் என்ன செவியோ என்று ஆய்ச்சியர் குரவைப் பாடல் விவரிக்கிறது.
சிலம்பு தரும் செய்தி
சங்க இலக்கியங்கள் கூறும் இராமாயணச் செய்தி வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறாதது. ஆனால் சிலப்பதிகாரம் கூறும் செய்தி வான்மீகி இராமாயணத்தை அடி ஒற்றியது. மேலும் திருமால் அவதாரமாக இராமன் கருதப் பெற்றதையும் விவரிப்பது.